‘சென்னை’ பதிவுகள்

சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.


”குட்மார்னிங் ஸார்!”

மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.

பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.

மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.

வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.

- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.


இந்த சியாட்டல் தீபாவளி ஏற்கனவே முடிந்து விட்டது. போன வாரம், வேறு கவுண்டியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் சிகரெட் லைட்டரால் ஒரு அடி மத்தாப்பு ஏற்றி, பாம்பு மாத்திரை கொளுத்தி, புஸ்வானம் விட்டு, மைக்ரோவேவ் திரட்டிப்பால் சாப்பிட்டு கிருஷ்ணனையும் நரகாசுரனையும் நினைத்துக் கொண்டேன். அண்டை வீட்டார் புகை வருவதைப் பார்த்து, கலிபோர்னியா காட்டுத் தீயென பயந்து வெளியே எட்டிப் பார்த்தார்கள்.

சென்னையில் பால்ய தீபாவளி கொண்டாடிய பொழுது, பட்டாசுக்காக சாப்பாடு துறந்தது பல முறை. அம்மா தரும் ஒரு கோலியுருண்டை மருந்தை அப்படியே முழுங்கி சரம் வெடிக்க தலை தெறிக்க ஓடியதும் பல முறை. புரசைவாக்கத்தில் அந்த கூட்டமான வெள்ளாளத் தெருவின் பல சந்துகளில் ஒரு பெரிய சந்தில் தான் என் தீபாவளி நினைவுகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

பாத்ரூம் க்ரில்லில் வைத்த ‘ஆட்டம் பாம்’ வெடித்து க்ரில் பெயர்த்துக் கொண்டு வந்ததும், கொட்டாங்குச்சி மூடி வைத்த லஷ்மி வெடி வெடிக்கிறதா என்று பார்த்த போது, முகத்தில் கொட்டாங்குச்சி வெடிக்க எதிர் வீட்டு சுஜ்ஜு சிரித்ததும்(scrabbleலில் அவளை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டேன்), சாணியில் நட்ட எதோஒரு வெடி வெடித்து, நாயரின் வீட்டின் சுவர் நாஸ்தியானதும், ராதாக்ரிஷ் விட்ட ராக்கெட் நானாவின் வேட்டியை துளைத்ததும் அந்த சந்தில் தான். வீட்டில் இருந்த வெடியெல்லாம் தீர்ந்து போக நண்பர்களுடன் ரோட்டை மேய்ந்து, வெடிக்காத வெடிகளை ‘புஸ்’ கொளுத்தி அப்பாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வருகின்றன.

ஸ்கூலில் ஒரிரு வாரத்திற்கு முன்பே திபாவளி fire பற்றிக்கொள்ள, மூச்சும் பேச்சும் தீபாவளி. பக்கத்தில் உட்காரும் சேட்டுப் பெண் ஷீக்கா, ஹிந்தி க்ளாஸுக்கு போகாமல், என்னோடு தமிழ் க்ளாஸில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு திபாவளி கதை பேசும் அளவுக்கு திபாவளி முக்கியமானது. இப்போது ஷிக்கா யாரைக் கட்டிக் கொண்டு எவ்வளவு குழந்தைகளோடு தீபாவளி பற்றி அளக்கிறாள் என்று தெரியவில்லை.

பத்தாவதுக்குப் பின் கொஞ்சமாய் பட்டாசில் நாட்டம் குறைந்து, தீபாவளி என்றால் தீபாவளி ரிலீஸ் என்றானது. தளபதியில் இருந்து தேவர் மகன், திருடா திருடா என்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு சினிமா தான்.

மூன்று வருடங்களாக, சியாட்டலில், திபாவளி அன்று காலை கங்காஸ்நானம் செய்து, சன் டீவியில் ‘முதல் முறையாக’ என்று எதை போட்டாலும் சட்டை செய்யாமல், டை கட்டி டைம்(time) படித்துக் கொண்டே பஸ்சில் ஆபீஸ் செல்கிறேன். அமெரிக்காவில் தீபாவளி என்ன, எல்லா பண்டிகைகளும் வீக்கெண்டில் தான் வருகின்றன. அல்லது வரவழைக்கப்படுகின்றன. அதுவும் ஒரு வகையில் சுவாரசியம் தான்.

இந்த தீபாவளிக்கு ஷாருக்கின் ஒம் ஷாந்தி ஓம் பார்ப்பதாய் எண்ணம். அடுத்த வாரம் தான் ATM சியாட்டலுக்கு வருகிறார். ரஹ்மானுக்காவும் விஜய்க்காவும் அதையும் பார்க்க எண்ணம். பார்க்கலாம்.


இரண்டு வருடங்களுக்குப் பின் கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை.

மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம் கட்டுகிறார்கள். ஆங்காங்கே தகரம் பெயர்ந்து ரோட்டில் நீட்டிக் கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் ஆட்டோ-ப்ரேக்குகலோடு ட்ராலி அழகாக அடுக்கி இருக்கின்றன. எக்கச்சக்கமாக பார்கிங் சார்ஜ் போடுகிறார்கள். சென்னையில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது. எல்லோரும் வண்டியை ‘வள்ச்சி ஓட்டிகினே’ போய்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் பல ஆயிரம் கார்கள் வானத்தில் இருந்து கொட்டிய மாதிரி இருக்கிறது. கிண்டியில் நேரு, ரவுண்டானாவை இழந்து புறா பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். லாரிகள் இடிக்காமல் இருந்தால் சரி. ராட்சத வினைய்ல் போர்டுகளில் சிவாஜி ரஜினி ஜீன்ஸில் நடக்கிறார். சிரிக்கிறார். குறுந்தாடி வைத்து ஷ்ரேயாவை வளைக்கிறார், க்கிறார், கிறார், றார்.

சென்னை 28ன் இருபத்தி ஐந்து நாள் வெற்றியில் வெங்கட்டும் கிரிக்கெட் டீமும் எல்லா டிவியிலும் பேசுகிறார்கள். செல்விகளும் தேவயானிகளும் இன்னும் மூக்கு சிந்துகிறார்கள். ஓப்பன் செட்டிங்கில் அதிர்ஷடக்கல் மோதிரத்திற்கு, டிவியில் அரை மணி நேரம் அட்வர்டைசிங் செய்கிறார்கள். சன் டீவியின் டட்டட் டடடைங் டைட்டில் மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழ் மாலை என்று இன்னமும் போடுகிறார்கள். அப்படியென்றால் என்ன என்று யாரும் கேட்பதில்லை. எல்லா சேனலும் எதாவது போட்டி வைத்து கொண்டு, தங்கமும் டைமண்டும் வழங்கும் சொர்க்க பூமியாயிருக்கிறது. மெட்ரோ ப்ரியா சாயலில் இன்னும் பலர் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து டீவி ஸ்கிரீனை குத்திக் குத்தி பேசுகிறார்கள்.

மக்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் பணமிருக்கிறது. முக்கியமாய் செல்போன் இருக்கிறது. ஐந்தில் இருவருக்கு இரண்டு போன் இருக்கிறது. எஸ்.டி.டி போன் பூத் பெண்ணிலிருந்து, காந்தி மண்டபத்தில் ஹெல்மட் விற்பவர் வரை எல்லோரும் யாரிடமோ எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோவிலிலும் தியேட்டரிலும் மால்களிலும் பல ரிங்டோன்களில் மொபைல்போன் அடித்துக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் கம்பெனிகாரர்கள் சிரித்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு நாளில் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கொள்கிறார்கள். மறுநாள் கழட்டி வைத்துப் போகிறார்கள். ராமாவரத்தில் க்ரவுண்டு 80 லட்சம் போகிறது. யாரோ வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படி என்று தான் புரியவில்லை. ரியல் எஸ்டேட் விலையை வைத்து எல்லோரும் பேப்பர் பணக்காரர்களாகி விட்டார்கள்.

ஹிந்து படிக்கும் மாமாக்கள், இப்போது டெக்கான் ஹிரால்டை சிலாகிக்கிறார்கள். குங்குமம் இன்னமும் சூப்பர்ர்ர்மா. ஸ்பென்ஸரின் அத்தனை phaseகளும் முழி பிதுங்குகின்றன. பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் தாண்டி லாண்ட்மார்க்கில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது. பா.விஜய் ஏராளமாய் கவிதை புத்தகம் போடுகிறார். பாலிடிக்ஸில் யாரோ யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்துக்கு கூட்டம் வருவதாக தந்தி பேப்பர் சொல்கிறது. எல்லா ஸ்கூல் பசங்களும் பத்மா சேஷத்திரியில் படிக்கிறார்கள். அல்லது படிக்க நினைக்கிறார்கள்.

டீனேஜர்கள் ஆர்குட்டில் புழங்குகிறார்கள். அல்லது மால்களில் பிகர் வெட்டுகிறார்கள். Chevy கார்களில் வந்து ஜெர்க் விடுகிறார்கள். புகை பிடிக்கிறார்கள். டேட் செய்கிறார்கள். BPOவில் ராத்திரியெல்லாம் போனில் அமெரிக்கர்களுடன் பேசுகிறார்கள். ஐடி கம்பெனிக்கள் பஸ்விட்டு ஊருக்கு வெளியே வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறது. NH 45யில் நேர்த்தியாக தார் ரோட் போட்டிருக்கிறது அரசாங்கம். ஆங்காங்கே கப்பம் கேட்கிறார்கள். சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு காரில் செல்ல 45 ரூபாய் டோல் கட்டவேண்டியதாய் இருக்கிறது.

சரவணபவனில் அதே கொஞ்சூண்டு காப்பிக்கு பத்து ருபாய் முழுசாய் வாங்குகிறார்கள். சாம்பார் இன்னமும் அதே டேஸ்டில் இருக்கிறது. தேசிகன் பிரஞ்சு தாடியில் ஊர் சுற்றுகிறார். பைக்கில் கற்பகாம்பாள் மெஸ்ஸிற்கும், அல்லயன்ஸிற்கும் கூட்டிச் சென்றார். தோசையும், சோவின் அதிர்ஷடம் தந்த அனுபவங்களும் வாங்கித் தந்தார். சீக்கிரம் நல்ல சேதி சொல்வார் என நம்பலாம். மயிலாப்பூரில் தினமும் அறுபத்தி மூவர் ஊர்சவ கூட்டம் போல் முண்டியடிக்கிறது. தி.நகரில் தெருவடைச்சானாக புது சரவணா ஸ்டோர்ஸ் வந்திருக்கிறது. எந்த ப்ளோரிலும் fire exitஐ காணோம். எல்லா பொருட்களும் உள்ளே ஒரு பத்து ரூபாய் கம்மியாய் கிடைக்கிறது. தி.நகருக்கு தனியாக ஒரு பார்கிங் strategy வேண்டும். ட்ராபிக் போலிஸ்காரர்கள் இன்னமும் அதிகமாக புகையை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு பதிப்பகத்தில் ஜரூராக வேலை நடக்கிறது. வாசலில் Sky is our limit, We are currently on second floor என்று போர்டு போட்டிருக்கிறார்கள். ரிசப்ஷனில் உட்கார வைத்து, இண்டர்காம் போட்டு, உள்ளே அனுப்பப்படுகிறேன். ஐடி கம்பெனி போல் தோன்றுகிறது. பா.ரா இரண்டு மணி நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தார். சுட சுட பிரிண்டாகி வந்த கம்ப்யூட்டர்ஜீயை பிரித்துப் பார்த்து, கூகிள் டாக்கில் சொக்கனிடம், பர்ஸ்ட் காப்பி வந்தாகிவிட்டது என்று சேதி சொல்கிறார்.

கே.கே நகரில் Beer Garden ஒன்று இருக்கிறது. மற்ற இடங்களில் டாஸ்மாக்கும், பிளாஸ்டிக் கப்புகளும் இருக்கின்றன. ஐஐடியிலேயே மரங்களை வெட்டுகிறார்கள். மற்ற இடங்களில் மரமே இல்லை. சென்னை சிட்டி சென்டரின்(CCC) KFCல் ஏகபோகமாக வியாபாரம். CCC அவ்வளவு பெரியதாக இல்லை. இருந்தும் உள்ளே இருந்த கல்லூரிக் கூட்டம் ஏதோ சேனலுக்காக காமிரா பார்த்து – It’s a cool place to hang-out என்று ஒரே தொனியில் கத்துகிறார்கள்.

முப்பது நாட்களுக்கு பிறகு இரவில் அமெரிக்கா திரும்பும் போது வானத்திலிருந்து பார்த்தால், சென்னையின் ட்யூப்லைட் வெளிச்சங்கள் அழகழகாய் மின்னுகின்றன.


chennai click

நான்கு மாதத்திற்கு முன் சென்னை சென்றிருந்த போது, ஆங்காங்கே வண்டியை நிறுத்தி நிக்கானில் க்ளிக்கினேன். வண்டியை ஓட்டிய ஆட்டோகாரர்களும், கால் டாக்ஸிகாரர்களும் நொந்து போனது மற்றொரு செய்தி.

அந்த புகைப்படங்களை அப்லோட் செய்ய இவ்வளவு நாளாகிவிட்டது. அப்படி ஒன்றும் சிலாகித்துக் கொள்கிற மாதிரி படங்களில்லை. ஆனாலும் சென்னையை கொஞ்சமாய் அள்ளிக் கொண்டு வந்ததில் சந்தோஷம்.

லேசி லென்ஸில்[ப்ராட்பேண்ட் தேவை] கொஞ்சமாய் செலக்டட் படங்கள் அல்லது ஃபிளிக்கரில் எல்லா படங்களுடன்(மத்தியில் உள்ள iயை அழுத்தினால் செய்தியுடன் புகைப்படங்கள்).