February 24th, 2010

வீடு

”திஸ் இஸ் ஆஸ்சம்”.

“தாங்ஸ் பிரவீன்”

“ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல”

” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி நினைக்கறதில்ல” என்று காப்பியை உறிந்து கொண்டே சொன்ன கணேஷை வியந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“ வெரி ட்ரூ. ஆனா பார்த்திபன் கனவுல ஸ்ரீகாந்த் சொல்லுவான், வீடு என்ன மியூசியமா? எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைச்ச மாதிரி இருக்க. இவர் அதை புடிச்சுண்டுட்டார். அண்ட்ராயர் முதக்கொண்டு ஹால்ல தான் அலக்கழியும்.”

”அரூ..இட்ஸ் ஓக்கே…” என்றவனை திரும்பி ஒரு முறைப்பு விட்டு மீண்டும் ஆரம்பித்தாள், “உக்காந்த இடத்தில காப்பி வரணும். குடிச்சிட்டு எங்கயாவது ஹீட்டர் கீழ வெச்சுட்டுப் போய்டுவார். கேர்லெஸ் நம்பர் ஒன். எத்தனை சட்டை வச்சிருக்கார்னு கேளுங்க, தெரியாது. மை டாட் வுட் கில் மி இஃப் ஐ வாஸ் லைக் திஸ். இவரோட ஆபீஸ் தான் இவரோட முத வைஃப். நானும் பசங்களும் இவரோட ஹாபி” என்று கண்ணை சுழற்றியபடி பேசிக் கொண்டே போனாள் எனதருமை அருணா.

அந்த இடத்தை விட்டு மெல்லமாய் நகர்ந்தேன். இந்த சனிக்கிழமை மாலை எனக்கு சரியில்லை போலும்.

அந்த வீடு பளிச்சென்று இருந்தது. வேக்யூம் செய்யப்பட்ட கார்பெட்டுகள், துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிகள். எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருந்தது. நடராஜர் சிலை துடைக்கப்பட்டு வருபவர்களை வரவேற்கிற மாதிரி வைக்கப்பட்டிருந்தது. போஸ் ஸ்பீக்கரில் மாலி குழலூத, ஒருவித ஆஃப்டோன் கலர் சுவரில் கோலாஜாக பேமிலி போட்டோஸ். டிபிகல் சஃப்யர்பன் ஹவுஸ். பாஸ்டனில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஆஷ்லாண்டில், 3000 சதுர அடியில் கட்டப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வீடு. ஐநூறாயிரம் என்று சொன்னதாய் ஞாபகம். வீட்டு வாசலில் தி ராஜாரமன்ஸ் என்று போர்டு சொல்லிற்று.

“இதல்லாமே எப்பவுமே இப்படித் தான் இருக்குமா” என்று அருணா கணேஷின் மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அர்விந்தும் சமிக்‌ஷாவும் அவர்களின் குழந்தைகளுடன் மாடிக்கு சென்றுவிட, அந்த நடராஜர் சிலையை ரசித்தபடி நின்றிருந்தேன்.

“பசங்க சாப்டுட்டாங்க. கமான் லெட்ஸ் ஹாவ் டின்னர்”, கணேஷின் மனைவி செல்வி.

டேபிளில் பரிமாறப்பட்ட டின்னர். எங்களுடைய வீட்டில் எப்பவுமே செல்ஃவ் சர்வ் தான். இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது. விருந்தினர் வந்தாலும் கூட டைனிங்கில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, அவரவர் எடுத்துக் கொள்ளும் ப்ஃபே சிஸ்டம் தான்.

“எப்பவுமே இரண்டு செட் கட்லெரி இருக்கும். ஒண்ணு டிஷ்வாஷர்ல இருந்துச்சுன்னா, அடுத்த செட். அதனால வீ கேன் டேக் விசிட்டர்ஸ் எனி டைம். சுத்தமா வெந்நீர்ல க்ளீன் பண்ணி உள்ள வெச்சுருவோம்” என்றெல்லாம் செல்வி சொல்லிக் கொண்டே போக, அரு என்னை கொஞ்சம் பாவமாய் பார்த்தாள். கணேஷ் பெருமிதத்தில் இன்னும் ரெண்டு கரண்டி உருளைக்கிழங்கை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“சூப்பர் சமையல். ரொம்ப தாங்ஸ். இதோ கை அலம்பிட்டு வந்து மேல பேசரேன்” என்று சொல்லிக் கொண்டே கெஸ்ட் பாத்ரூமை தேடிக் கொண்டே போனேன்.

“டாடி!” என்று சமிக்‌ஷா கத்துவது மாடியிலிருந்து கேட்டது.

“ஒண்ணும் இருக்காது. அவளுக்கு எப்பப் பாத்தாலும் ஒரே அடம்” என்று சொன்ன அருணாவுக்கு காது கொடுக்காமல், அப்படியே மேலே ஓடினேன்.

எதிர்ப்பட்ட ரூமில் லைட் போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த போது, சமிக்‌ஷா ஸ்பான்ஜ் பாப் பொம்மைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். ”ப்ளீஸ் டோண்ட் ஃபைட் வித் ஹிம்” என்றேன். “சரி டாடி!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சண்டையிட ஆரம்பித்தாள்.

அந்த குழந்தைகள் ரூம் கூட சுத்தமாய் இருந்தது. எல்லா பொம்மைகளையும், ஒரு ஹாமக்கில் கட்டி தொங்க விட்டிருந்தார்கள். தரை சுத்தமாக இருந்தது. இரண்டு குழந்தைகள் அந்த ரூமில் வசிப்பதற்கான அறிகுறி கூட இல்லாமல். வீட்டின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. அதைவிட வீட்டுக்கு போனவுடன் அருணாவிடமிருந்து விழம் டோஸ் பற்றி கவலை அதிகரித்தது.

ரூமை விட்டு வெளியே வந்தேன். இதைத் தவிர இரண்டு பெட்ரூம்கள் இருப்பதாக பட்டது. லைட் போடாததால் சரியாக தெரியவில்லை. கை அலம்பாதது ஞாபகம் வந்தது. எதிரில் பாத்ரூம் தெரிய, உள்ளே சென்று லைட் போட்டேன்.

கையலம்பி விட்டு, பக்கத்தில் தொங்கும் டவலில் கை துடக்கும் போது கண்ணாடியை பார்த்து, ”நீயும் இருக்கியே வீட்ட பத்திக் கூட அக்கறையில்லாம” என்று ரொம்பவும் மனதுக்குள் பேசினேன். டீஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டேன். அப்போது தான் அங்கே பரவியிருந்த அமைதி உரைத்தது. எதிரில் பாத் டப்பை மூடியிருந்த கர்ட்டன் அழகாயிருந்தது. துணியா ப்ளாஸ்டிக்கா என்று தொட்டுப் பார்க்க நினைத்தேன். ப்ளாஸ்டிக்.

அப்போது என்னவோ தோன்ற, அந்த திரைச்சீலையை சற்று தள்ளி டப்பினுள் எட்டிப் பார்த்தேன். பயந்து போய் கையை பின்னுக்கு இழுத்தேன்.

மூன்று…மூன்று பேர், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சீலையை திறந்த என்னை சற்றே பதட்டத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. குள்ளமாய், க்ரே கலரில், ரொம்பவே அழுக்காய். தலையில் இரண்டு சிறிய வெள்ளைக் கொம்புகள் தெரிந்தன. நகங்கள் விரல் நீளத்துக்கு வளர்ந்திருந்தன. சீராய் ஆனால் வெளியே தெரிகிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டு, என்னை ரொம்பவே பயத்துடன் பார்த்துக் கொண்டு.

எதாவது பேச வேண்டுமா என்று கூட தெரியாமல், திரைச் சீலையை மூடி விட்டு, லைட்டை அணைத்து வெளியே வந்தேன். குழந்தைகளை முதலில் கிழே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பாத்ரூமிற்கு எதிரில் இருந்த அலமாரிகளின் கதவை திறக்க ஏன் தோன்றியது என்று புரியவில்லை. மெதுவாய் சத்தமிடாமல் திறந்தேன்.

டிஷ்யூ பேப்பர், க்ளீனெக்ஸ், காரெல், ப்ளாஸ்டிக் பேக் இத்தியாதி இத்தியாதி எல்லாம் இருந்தன. தலை சற்று மேலே உயர்த்தி மேல் அலமாரியில் பார்த்த போது, இரண்டு பேர், அதே மாதிரி, அரண்டு போய், தன் சிறிய கால்களை கைகளால் கட்டிக் கொண்டு, என்னை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களை சற்று உற்று நோக்கினேன். ஐந்து விநாடிகளுக்கு.

கதவை மூடிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினேன்.

”அரூ…ஆபிஸ்லேர்ந்து போன். ஐ ஹாவ் டு கோ சூன். கம் லெட்ஸ் ஸ்டார்ட்…”

February 22nd, 2010

ஊசி

ஹப்பா….செம ஜம்ப். என்ன ஒரு நாற்பதடி இருக்குமா? குதிக்கும் போது வலி தெரியாது, அதைப் பற்றி எனக்கும் கவலையில்லை. இந்த வலியை ஓடிக் கொண்டிருக்கும் அந்த ப்பாடுக்கு கொடுக்கப் போகிறேன்.

கால் தரையில் பட்டவுடன் ஓட்டமெடுத்தேன். ஒரு மணிக்கு ஐம்பது கி.மீ வேகம். நெஞ்சடித்துக் கொண்டிருந்தது. ரத்தத்தில் ஏற்றப்பட்டிருந்த ரசாயனம் கொடுத்த வேகம். ரசாயனத்தால் உடல்நலக் கவலையில்லை என்றார்கள் சக ஊசிக்காரர்கள். அவன் வேகமாய்த் தான் ஓடிக் கொண்டிருக்கிறான். தன்னைத் துரத்தும் போலிஸ்காரனை அறியாமல். காட்டுத்தனமாய் அவனை துரத்தியபடி நான். அவன் பிணமாகவாவது வேண்டும் என்று தானே சொன்னார்கள்.

இங்கிருந்து நகர்ந்தபடி இருக்க வேண்டும். இவனைப் போல மற்றவர்கள் இருக்கலாம். இங்கேயே இருந்தபடி மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள நான் தயாரில்லை. படபடத்துக் கொண்டிருந்த நெஞ்சையும் உயிரையும் சற்றே கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்கு எதோ இருக்கிறது, நின்று விட்டால் திரும்பி வந்து அடித்துவிடும். ஓட வேண்டும்.

ஐ.டி கார்டில் ஸ்பெஷல் ஸ்பீட் க்ருப் என்று போடப்பட்டிருக்கிறது. என்னை இந்த ஊசிக்கார ஃபோர்சில் தேர்தெடுத்தார்கள் என்று தெரியும். ஏன் என்பதை பற்றி மயித்துக்கும் கவலையில்லை. என்னுடைய தற்போதைய கவலையெல்லாமே, தூரத்தில் கேட்கும் காலடிச் சத்தங்களும், பிய்ந்து போய் தொங்கும் என் முட்டுச் சதை எரியுமா என்பதைப் பற்றித் தான். மக்கள் என்னை மாதிரி ஓட முடியாது. மக்கள் என்று குறிப்பது கிரிமினல்களை. நரக வாசலுக்கு தங்களுடைய உறுப்புக்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகப் போகிறார்கள். ஆனால் அதற்கு முன் இந்த கம்னாட்டிகளை மவுண்ட் ரோடை நக்க வைக்கப் போகிறேன்.

காலடிகள் கேட்பது நின்றுவிட்டது. ஒளிந்து கொள்ள வேண்டுமா? இப்படியே உட்கார்ந்து கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு. கண்ணை மூடிக் கொண்டு. காத்திரு.

மூச்சு சீராகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எனக்கு துப்பாக்கிகளை கொடுப்பதில்லை. நான் கேள்விப்பட்ட வரை ஊசிக்காரர்களுக்கு துப்பாக்கியில்லை. ஊசிக்குப் பின் அவற்றை சரியாக உபயோகப்படுத்த முடியாது என்பதால். இந்த இரவை விடுவதாயில்லை. அவன் கையில் கிடைத்தால் மண்மூட்டையைப் போல அவன் முகத்தைப் பதம் பார்க்கப் போகிறேன். மூச்சு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தது. ம்ம்…. இனிமேல் அனிதாவை பார்க்க முடியுமா என்று தோன்றியது. என்ன ஆயிற்று அவளுக்கு?

தூ….அந்த தேவடியாமகன் ராஜாவோடு சேர்ந்து என்னை ஏமாற்றியவள்.

சத்தியமாய் ராஜா மாதிரி கழிசடையாய் இருக்க என்னால் முடியது. ஹூம் ஹூம்.

பாக்கெட்டிலிருந்து எடுத்து இடது கையில் மற்றுமொரு ஊசி போட்டுக் கொண்டேன். அடுத்த நொடி மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். சே…என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். முதலில் நினைப்பதை நிறுத்து கமாண்டோ. வயதான பெண்மணியை கொன்று விட்டு தப்பி ஓடும் அந்த மாக்கானைக் கண்டுபிடித்து, நெஞ்சாங்கூட்டை பிய்த்துப் போடு. புத்திசாலித்தனமான எண்ணம். இன்னுமொரு மேம்பாலத்திலிருந்து இன்னுமொரு நீண்ட ஜம்ப். அதோ ஓடிக்கொண்டிருக்கிறான் ப்பாடு. எனக்கு எதன் மேலோ கோபம் வந்தது, கொஞ்ச நேரத்தில் அவனும் அதை தெரிந்து கொள்வான்.

October 14th, 2009

அலைபாயுதே!

google wave alai paayuthey

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த வரவேற்பை வைத்து கூகிள் வேவ்வை கொஞ்சம் வேவு பார்க்க முடிந்தது. முதலில், நண்பர்கள் இல்லாமல் வேவ் வீண். நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கும், விவாதம் செய்வதற்கும், எதையாவது டிசைன் செய்வதற்கும் கூகிளின் அடுத்த தலைமுறை தகவல் பரிமாற்ற இஞ்சின். இதைத் தவிர ரியல் டைம் டாகுமெண்டேஷன் போன்ற விஷயங்கள்.

இதெல்லாம் இமெயிலிலும், இன்ஸ்டண்ட் மெஸஞ்சரிலும்(ஐஎம்) சாத்தியமே. சாட்டில் இல்லாத எதை இதில் கண்டீர் ஐயா என்று கேட்கலாம். சாட்டில் உங்களுடன் பேசும் நண்பர் டைப் செய்யும் போது, அவர் இப்போது டைப் செய்கிறார் என்று ஒரு செய்தி உங்களுடைய சாட் விண்டோவில் தெரியும். வேவ்வில் அவர் என்ன டைப்பிக் கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியும்.

யோசித்துப் பாருங்கள், கேர்ள் ப்ரண்டுடன் வேவிக்(தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மற்றுமொரு அகராதி வார்த்தை) கொண்டிருக்கும் போது, “தீபாவளிக்கு எங்க கூட்டிக்கிட்டு போகப்போறடா?” என்று கேட்க, ஆதவனுக்கு பர்ஸ்ட் ஷோ போக நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், “சத்தியமா எங்கேயும் இல்ல” என்று டைப் அடிக்கும் போது தான் உரைக்கும் நீங்கள் டைப் அடிப்பது அப்படியே அங்கே தெரியும் என்று. என்னதான் அதை மாற்றி, “சத்தியமா எங்கே வேணும்னாலும்” என்று அடித்தாலும், உங்களுடைய உயிருக்கு பாதுகாப்பில்லை.இந்த மாதிரி இன்னொரு முனையில் எழுதிக் கொண்டிருப்பவரை second guess பண்ண வைக்கும் ஒரு வஸ்துவை கண்டுபிடித்த ப்ரகஸ்பதியை என்ன செய்யலாம்.

யோசித்துப் பார்த்தால், கூகிளுக்குத் தான் இது ரொம்பவும் முக்கியம். யார் எந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார், பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால் தங்களுடைய விளம்பரங்களை இன்னமும் சரியாக குறி பார்த்து வழங்க முடியும். கார் பற்றி வேவும் நண்பர்களுக்கு, பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவரவரின் வீட்டின் அருகே இருக்கக் கூடிய கார் விற்பனையாளர்களின் சலுகை விளம்பரத்தை அளிக்க முடியும். கூகிளின் பற்பல இணைய சர்வீஸ்களுக்கும் காரணம், வரி விளம்பரங்கள்.

போகப் போக வேவ் போன்ற விஷயங்கள் வாழ்க்கை முறையாகிப் போகலாம். ஆனால் அவசர உலகத்தை, டைப் செய்யக் கூட விடாமல் மேலும் அவரசமாக்கிய கூகில் வேவிற்க்கு ஒரு தற்காலிக அபவுட்டேர்ன்.

சமீபத்தில் சென்னை சென்று திரும்பிய நண்பர் கொடுத்த இசைப்பயணம் என்ற ஒலித்தகடை கேட்க முடிந்தது. சாருலதா மணி என்ற பாடகி சபாவிலோ டிவி சானலிலோ, ராகங்கள் பற்றி பேசும்/பாடும் கொஞ்சம் வித்தியாசமான விஷயம். முன்று ராகங்களுக்கு ஒரு சிடியென ஏழு பாகங்கள். மேடையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். அதை லைவாக பார்க்கும் ரசிகர்கள் பேசுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள், சமயத்தில் ராகத்தை பற்றி கொஞ்சம் கமெண்ட் எல்லாம் செய்கிறார்கள். இத்தனையும் ஆடியோ சிடியில் கேட்கிறது.

ஒவ்வொரு ராகமாய் எடுத்து அதனை அறிமுகித்து, கொஞ்சம் ஆராய்ந்து, அந்த ராகத்தில் இருக்கும் கர்நாடக பாடல்களையும், சினிமா பாடல்களையும் வரிசைப்படுத்தி கடைசியாய் கச்சேரி வடிவில் ஆலாபனையில் ஆரம்பித்து ஒரு பாட்டு பாடுகிறார். இதைப் போன்ற முயற்சிகள் கர்நாடக இசையை அவாளிடம் இருந்து இவங்களிடம் எடுத்துச் செல்லக்கூடியவை. சாருலதா சுத்தமான அமெரிக்க ஆங்கிலத்தில் பேசாமல் நிறையவே தமிழில் பேசினால் நல்லது. ஆங்கிலத்தில் பேசுவது கண்டிப்பாய் தப்பல்ல. ”Vasantha raagam goes like this, ராம ராம ராம ராம… just straight notes, there’s nothing curvy about it” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசாமல், அவ்வப்போது தமிழிலும் கொஞ்சம் பேசினால் செம்மொழிக்கு நல்லது.

இதைத் தவிர சாருலதா சினிமாப் பாடலை பற்றி அறிமுகம் செய்யும் போது கிண்டல் லேசாய் எட்டிப் பார்க்கிறது. “இப்போதெல்லாம் குத்துப் பாட்டுன்னு எதோ போடறா…too noisy. ராகத்தை பேஸ் பண்ணி வர சாங் தான் என்னென்னிக்கும் நிலைச்சு நிக்கும்”. அறிவரைக்கு நன்றி.

இன்னும் இரண்டொரு மாதங்களில் சென்னை களை கட்டப் போகிறது. நவம்பர் 15ந்தில் ஆரம்பித்து ஜனவரி வரை இயல் இசை நாடக விழா. அதுவும் டிசம்பர் சீசனுக்காக பட்டுப் புடவையில் ஆரம்பித்து, சபா தாவல், அடை அவியல், தொடை தட்டல் என்று மயிலாப்பூர் ஏரியாவே பிசியாகப்போகிறது. எதோ சபாவில் ஒரு கச்சேரியோ சில கச்சேரிகளோ செய்ய அமெரிக்காவில் இருந்து வயலினிஸ்ட், வோகலிஸ்ட், தம்புராயிஸ்ட் என்று கொன்னக்கோல் சொல்பவர் வரை சென்னையை நோக்கி குடும்பம் சகிதமாக படை எடுக்கப் போகிறார்கள். கச்சேரி கேட்பதற்காகவும் அமெரிக்காவில் இருந்து பலர் வருவதாக கேள்வி. இதில் அடியேனும் உண்டு.

இந்த வருடமாவது சுதா ரகுநாதனோ சஞ்சய் சுப்பிரமணியனோ கடம் கார்த்திக்கோ சிக்கல் குருசரனோ கார்ப்பரேஷன் பள்ளிச் சிறார்களுக்காக ம்யூஸிக் அகாடமியில் ஒரு கச்சேரி செய்ய மந்தவெளி அனுமாரை வேண்டிக் கொள்ளலாம். ஆலாபனை ஆரம்பித்த உடன் யாரும் எழுந்து செல்லாமல், உள்ளே நுழையாமல் ப்ராட்வே ஒப்பரா மாதிரி சட்டம் போடலாம். அழும் குழந்தைகளைக்கு மட்டும் விலக்கு. அப்படியாவது பிள்ளைகளை கச்சேரி கேட்க அழைத்து வந்தால் சரி. இல்லையென்றால் வீட்டில் இன்னும் இரண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு பாஃப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.

சபா வாசலில் உள்ளே நுழைபவர்களை ப்ரிஸ்க் செய்து, மூக்குப் பொடி, வெத்தலை சீவல் சுண்ணாம்பு இதர சாமான்களை பிடித்து வைத்துக் கொண்டு வெளியே போகும் போது கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பட்டுப் புடவைக்கு ராம்ப் வாக் வைக்கலாம். டிபன் வாசனை உள்ளே நுழைந்து மக்களை வெளியே இழுக்காமல் இருக்க கதவை அழுத்தி மூடலாம். பாடகர் பாட ஆரம்பிக்கும் பொழுது, அந்தந்த ராகத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்கள் பேசினால் என்னைப் போல் அசமஞ்சங்களுக்கு கொஞ்சம் ரசிக்க வசதியாய் இருக்கும். மற்றபடி ரசிகாஸ் பிட்டுப் பேப்பரில் பாடல் சஜஸ்ட் செய்யாமல், உட்கார்ந்து கொண்டு சத்தமாய் ப்ரதிமத்யம இடங்களில் கமெண்ட் அடிக்காமல், தப்புத் தப்பாய் தாளம் போடாமல் இருக்கக் கடவுக.

பி.கு – சமீபத்தில் வெளியான வேட்டைக்காரன் பட இசை ஆல்பத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது என்ற குத்துப் பாடலை பாடியிருப்பவர் சாருலதா மணி.

டண்டடன் டட டடைன் கேட்டீர்களா ? ராஸ்கல்கள் அதாவது கமினே படத்தில் வரும் பஞ்சாபி க்ளப் இசைப் பாடல். சங்கர் மகாதேவன் கண்டுகோண்டேன்*2 படத்தில் என்ன சொல்லப் போகிறாய் பாடியபோது இருந்த ஒருவித ஜுர வேகம், சுக்வீந்தர் சிங் பாடியுள்ள இந்தப் பாடலிலும் இருக்கிறது. நம்பாவிட்டால் ஐபாடிலோ அல்லது எதையாவதையோ காதில் மாட்டிக் கொண்டு கொஞ்சம் நேரம் ஓடுங்கள்/நடங்கள். பாட்டு முடிந்தவுடன்,ரீவண்ட் செய்து மீண்டும் ஓடுங்கள். மீண்டும்.

கமலின் சீமந்தபுத்ரி ஸ்ருதியின் உன்னைப்போல் ஒருவன் இசை சுமாராயிருக்கிறது. கேட்கலாம். இந்த மாதிரி சீரியஸ் படத்துக்கு இசை அமைப்பது கொஞ்சம் கடினமும் கூட. காலேஜ்வாசிகளை கவர, கொஞ்சம் லைட்டாய் இனிய வரிகளை வைத்து டூயட் கூட போட முடியாது. ஸ்ருதிக்கு எல்.ஏயில் இசை படித்ததாலோ என்னவோ சாஸ்திரிய சங்கீதத்தை விட ராக் இசையின் ரிதம் சுலபமாக வருகிறது. மெலடிக்களில் கூட தன்னையறிமால் வந்து விழுகிறது எலக்ட்ரிக் கிடார்.

கமல் கொஞ்சம் ஆர்பாட்டமில்லாமல் அல்லா ஜானே பாடலை பாடியிருக்கலாம். நிலை வருமா பாடலில் எஸ்பிபி சிரிப்புகள் செய்யாமல் இருந்திருக்கலாம்.

ஆல்பத்திலேயே பிடித்தது, கீதையின் வரிகளை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல். அதிலும் இந்த இடத்திலிருந்து(2:09 முதல்) பிரமாதம். மற்றபடி பாடல் வரிகள் ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்த வரிகளை வைத்து எழுதியிருப்பதை கவனித்தீர்களா ?

a wednesday

எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை மணியிலேயே நஸ்ருதீன் ஷாவை பற்றி கண்டுபிடித்து விட்டதனால், இயக்குனரின் வித்தியாச திரைக்கதை மனசில் ஒட்டவில்லை.

மற்றபடி இந்த மாதிரி சினிமா வந்தா தான் இந்திய சினிமாவுக்கு நல்லது என்ற ____வுட் ’டாக்’ எல்லாம் கேட்டு அலுத்து விட்டாயிற்று. இதை பார்த்த பின் கமல் எடுத்த இதன் தமிழ்ப் பதிப்பை பார்க்க ரொம்பவும் எதிர்பார்ப்பில்லை. தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலே கதையை சொல்லாமல் இருக்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்றெல்லாம் சொல்லியும் தமிழர்களுக்கு ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை என்றால், அவர்களை ப..பு..தி.

delhi 6

தில்லி 6 – அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, மக்களை விரும்பி, பெண்ணை சைட் அடித்து, லோக்கல்வாசிகளிடமிருந்து உதை வாங்கி/கொடுத்து, அமெரிக்கா திரும்பிச் செல்ல மறுக்கும் சுவதேஸ கதை. இதைத் தவிர ஹேராம் பிரச்சனைகள். மனதில் தங்கிப்போனதற்கு காரணம் இரண்டு விஷயங்கள். எதோ காமெடிக் கிளைக் கதையாக ஆரம்பித்த கருப்பு குரங்கு விஷயம் அனுமார் வாலாக நீண்டு திரைக்கதையின் திருப்பத்திற்கு உபயோகப்பட்டிருப்பதும், பிரபல கவிஞரை ஞாபகப்படுத்தும் முகத்துடன் வரும் அந்த மனநிலை சரியில்லாதவரின் உனக்குள் கடவுள் தத்துவமும்.

வழக்கம் போல பின்னியிருக்கும் ரஹ்மானின் பாடல்களை சரியாக உபயோகிக்காததால் தில் கிரா தஃப்பதனை தவிர மற்றதெல்லாம் சுமார். காலா பந்தரில் ராப் ஆட்டம் ஆடும் ஜுனியர் பச்சன் எம் டிவி பார்த்ததில்லை போலும்.

nadodigal

நாடோடிகள் – கலக்கலாயிருக்கிறது என்று சிலர் சொன்னதால் பார்த்தால், செம கடி. உப்புமா கதை/தி.கதை. சுப்பிரமணியபுரம் தந்த தைரியத்தில் எடுத்த படம் போல தெரிகிறது. சசிகுமார் ஒரே மாதிரி தாடி வைத்து, மையமாக சிரித்து, இறுக்கமாகவே இருக்கிறார். யதார்த்த தமிழ் சினிமா போலவே ஆரம்பித்தாலும், க்ளைமாக்ஸ் திருப்பத்தில், நண்பர்கள் மூவரும் ஸ்லோமோஷனில் பழி வாங்க நடக்கும் போது கோலிவுட் தெரிகிறது. படத்தில் ரொம்பவே ஸ்லாப்ஸ்டிக் காமெடி.

அச்சமுண்டு அச்சமுண்டு

தலை கலைந்த பொம்மை, தனியே ஆடும் ஊஞ்சல், எட்டிப் பார்க்கும் பாம்பு என்று ஒரு த்ரில்லருக்கு தேவையான அத்தனை டெக்ஸ்ட்புக் சமாசாரங்களும் இருந்தாலும், படம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த குடும்பத்தின் தனிமையும், இயற்கையான புற சத்தங்களும், பிண்ணனி இசையில்லாமல் விடப்பட்டிருக்கும் பல காட்சிகளுமே காலர் தூக்க வைக்கும் விஷயங்கள்.

அமெரிக்காவின் வசிக்கும் தமிழ்க் குடும்பம் கடைசியாக கொஞ்சம் உருப்படியாக திரையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ப்ளாரிடாவில் பாராஸ்கீயிங் செய்து கொண்டு, கண்ணைவிட மிகப்பெரிய சன்க்ளாஸ் அணிந்து, மால்களில் கட்டிப்பிடித்து காதல் செய்து, வேகாஸ் இரவில் ஸ்னூக்கர் தட்டி விட்டு, கோல்டன் கேட்டில் டூயட் பாடுவதெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்து மற்ற தமிழ்/இந்தி சினிமாவில் மட்டும் தான். இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம். கிட்டத்தட்ட.

இந்த இரண்டு நிமிட, எல்லோருக்கும் தெரிந்த முடிவை நோக்கியே செல்லும் கதையை, அறிமுக டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தில் இருந்தால் ஒழிய எடுத்திருக்க முடியாது. பயப்பட வைக்கவே இல்லையென்றாலும், யதார்த்த சம்பாஷனைகளால் ரசிக்க முடிகிறது. பொழுதுபோக்கு சினிமாவில் மெசேஜ் என்று கடைசியில் க்ராபிக்ஸில் பூச்சிபூச்சியாய் புள்ளிவிபரம் போடுவதால் பயனில்லை. அல்லது உள்ளது, அவார்டுக்கு.

ப்ரசன்னாவும் ஜான் ஷியாவும் அந்த குட்டிப் பெண்ணும் தன் பங்கை செய்திருந்தாலும் படத்தில் வீக் லிங்க் சுமாராக டைலாக் டெலிவரி செய்யும் சினேகா தான். ரொம்பவே சிரமப்படாமல் ஹாலிவுட்டில் எதாவது பயிற்சி வகுப்பிற்கு போயிருந்தால் சினேகாவிற்கு இந்த மாதிரி ஆட்டு மந்தைதனம் இல்லாத தமிழ் சினிமாக்களில் சான்ஸுண்டு.