டியர் சுப்புடு,

உங்களின் யாவரும் நலம் விமர்சனம் படித்தேன். படித்தேன் என்பதை விட அதை மிகவும் ரசித்தேன், மதித்தேன். பத்து வருடங்களாக என் மனதின் இருந்த பல சந்தேகங்களும் விடை தந்தது அந்த விமர்சனம். சமீபமாக தமிழில் வந்த மிக முக்கியமான விமர்சனம் இதுதான். இதை கண்டிப்பாக உலகத்தின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். ஜாதி மதம் கடந்த ஒரு சிறந்த பார்வை அது.

கடந்த முப்பது வருடங்களாக தமிழ் நாவல் உலகின் மிக முக்கியமான வாசகரான உங்களை ருஷ்யாவின் விமர்சன எழுத்தாளர் டுபாக்ஸி கேனைகனக்கோவ்வுடன் ஓப்பிட்டு நானும் எனது நண்பர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம். என் நண்பன் ஜிக்கி உங்களை நியுசிலாந்தின் ஆத்தி லாக்கர் உடன் இணைத்து பேசப் போக எனக்கு கோபம் வந்து, கையில் இருந்த பீர் பாட்டிலால் அவனது மண்டையை உடைத்து விட்டேன். நான் மதிக்கும் சுப்புடுவின் விமர்சனத்துக்கு அருகில் ஆத்தி எழுதிய ஸ்டார் ட்ரக் விமர்சனம் எல்லாம் தூசு. இப்படி செய்ததற்காக கோபப்படாதீர்கள். என்னுடய பல பெண் நண்பர்கள் சதா சர்வ காலமும் உங்களை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படிப்பது உங்கள் எழுத்துக்களை மட்டும் தான். நிஷிதா உங்கள் புகைப்படத்தை தான் மொபைலின் பேக்கரவுண்டாக வைத்து கொண்டிருக்கிறாள்.

உலகில் இருக்கும் பலவிதமான விஷயங்களை பற்றியும் உங்களின் கருத்துக்களை அறிய முற்படும் பல கோடிப் பேர்களில் நானும் ஒருவன். காலை எழுந்தவுடன் பல் தேய்பதற்கு முன் படிப்பது உங்கள் வலைதளத்தை தான். ஒருநாள் நீங்கள் எழுதாவிட்டால் எனக்கு தூக்கம் வருவதில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் முன்பு எழுதியதையே படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை உங்களில் ஆறுபத்தி எட்டு பத்திகளை பல்லாயிரக்கணக்கான முறை படித்து விட்டேன். என் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் உங்களின் புனைகதையை படித்துக் காட்ட சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த கடிதத்தை நீங்கள் வலைதளத்தில் பதிப்பிக்க மாட்டீர்கள். இதைப் போல உங்களுக்கு ஏராளமான கடிதங்கள் குவியலாம். இதை உங்கள் வலைதளத்தில் ஏற்றினால், எனக்கு ஜென்ம சாபல்யம். நிஷிதா உங்களுக்கு ஒரு பெரிய ‘ஹாய்’ சொன்னாள்.

ஜூன் 5, 2009
சிவராமன்
குடவாசல்.

சிவராம்,

முதலில் குடவாசலில் இருக்கும் அந்த ஜம்பு கோலி சோடா கடை இன்னும் இருக்கிறதா. சிறுவயதில் எனக்கு என் தந்தை அங்கு கோலி சோடா வாங்கித் தந்தார். பின்பு பல முறை பார்க் ஷெராடனில் தீர்த்தசவாரி செய்யும் போதெல்லாம், அந்த கோலி சோடா தான் ஞாபகம் வரும்.

நீங்கள் எழுதியதெல்லாம் எனக்கு பழகி போய் விட்டது. தசாவதாரத்தின் பாடலை பற்றி நான் எழுதிய அந்த நுண்ணிய விளக்கத்தை படித்து கமல் போன் செய்து பாராட்டினார். டுவிட்டரை பற்றி நான் எழுதிய பத்தியை ஆப்ரிக்காவின் பீலாயுவில் சர்சையை உருவாக்கியிருக்கிறது. விக்கிபிடியாவில் என்னையும் இரானின் பாரூட் டுமாரருக்கையும் இணைத்து கொண்டாடுகிறார்கள். எதிர் வீட்டில் சந்தியா பூனையை பார்க்கும் பொழுது என் கர்வம் உடைகிறது.

எண்பதுகளில் என்னுடைய எட்டாவது வயதிலேயே என்னை பெண்கள் சுற்றி வர ஆரம்பித்தார்கள். இன்று வரை என் மெயில் பாக்ஸை திறந்தாலே, இங்கே வரியா, போன் பண்ணுவாயா என்று ஏகப்பட்ட மெயில்கள்.

போன வாரம் ஜகன் பரமேஷ்வர் என்பவர் டுவிட்டரில் எனக்கு கானா பாடத் தெரியாது என்று எழுதியிருந்தார். அவருக்கு பதிலை இன்று முதல் ஆயிரத்தெட்டு டுவீட்டுகளாக எழுத உள்ளேன். பிக்கடோர் நிறுவனம் அந்த பதில்களை இணைத்து சுப்புடுவும் ஜிகினா கானாக்களும் என்று புத்தகம் போட ரெடியா உள்ளார்கள். இதற்கு அட்வான்ஸாக 10,000 ருபாய் செக் கொடுத்தார்கள். இன்று ஞாயிறாக உள்ளதால் அதை என்காஷ்(என் காசு) செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது சிங்கிள் டீக்கு மூன்று மணிக்குள் கைக்காசு கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு நான் பெங்களூருக்கு ப்ளைட்டில் சென்று இரவு ஷெராட்டனில் தங்கப் போகிறேன்.

1:16:15 pm.

சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய – ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட – எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ சொன்னார். அவருடைய அப்பாவும் என்னை மாதிரியே, அவருடைய நாயை நாய் என்று விவேக் எகுறிப்பிட்டால் “நீதான்டா நாய்; இவனை ஏன்டா நாய் என்று சொல்லுகிறாய்?” என்பாராம்.

இதேபோல் அவர் தனது சொந்தப் பிரச்சினைகளையும் எழுதியதே இல்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜீவனோபாயத்துக்காக வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து வந்தார். கடைசிக் கட்டத்தில் ஒரு அலுவலகம். ஒரு சிறிய அறை. சுஜாதாவோ ஆறு அடிக்கு மேல் உயரம். ஆறேகால் கூட இருக்கலாம். காலை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். எழுந்து நின்றால் மேலே தலை இடிக்கும். யாராவது விசிட்டர் வந்தால் சுஜாதா அவரை வெளியே வந்துதான் சந்திக்க வேண்டும். உள்ளே அவர் அறையில் இடம் இருக்காது. இப்படி ஒரு கல்லறை மாதிரியான ஒரு அறையில் தனது கடைசி காலத்தில் அவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்யாவிட்டால் அவருடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாகி இருக்கும். எழுத்தின் மூலம் வரும் பணம் அவருக்கு ஒருநாளைக்குக் காணும். மீதி 29 நாட்களுக்கு எங்கே போவார்? இதைப் பற்றியெல்லாம் அவர் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா? எழுத மாட்டார்.

இந்த இரு பாராக்களை எழுதியவர் ஒரு ‘fantasy writer’. எந்த ஒரு எழுத்தாளைனையும் படிக்காமல், சூழ்நிலைக்கேற்ப தான் எழுதியதையே மாற்றி மாற்றி எழுதும் கலகக்கார so-called-எழுத்தாளர்கள் இருக்கும் வரை மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்கள் தான்.

மேலே உள்ள இரண்டு பாராக்களை பிரித்து மேய்ந்து எழுத முடியும். எழுதினால் எனக்கும் இதை எழுதியவருக்கும் வித்தியாசம் இருக்காது. முக்கியமான விஷயங்கள் – சுஜாதா தன்னுடைய கடைசி பத்து வருடங்களாக எழுதியவை சுயசரிதை தன்மையுடைய கட்டுரைகளே. அவரே கற்றதும் பெற்றதுமில், விகடன் பாலசுப்பிரமணியன் சுயசரிதை எழுத சொன்னதாகவும். சுயசரிதை எழுதினால் வம்பு வரும் என்பதால், கற்றதும் பெற்றதும் போல எல்லாம் கலந்த பத்தி எழுதலாம் என தீர்மானித்தார் என்கிறார். கற்றதும் பெற்றதுமின் முதல் வருடத்தில் அவர் எழுதிய சுயசரிதை சம்பவங்கள் பல. இதையெல்லாம் தவிர தன் அப்பா மறைந்தவுடன் எழுதிய அப்பா அன்புள்ள அப்பா முதல் முதல் ப்ளைட் ஓட்டிய அனுபவம், வீடு மாறிய அனுபவம், பெண் பார்த்த அனுபவம், குடும்பத்துடன் எல்டிசியில் தமிழ்நாடு டூர் போன அனுபவம் என அவர் தன்னுடைய சுயசரிதையை பிரித்து பிரித்து பல இடங்களில் எழுதியிருக்கிறார்.

இந்த பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜீவனோபாயத்துக்காக என்கிற வார்த்தையை கவனிக்கவும். இந்தப் பாரா முழுவதும் பொய் என சுஜாதாவே எழுதியதை வைத்தே சொல்ல முடியும். பணத்தை பற்றி தனது கவலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டதாகவும், தான் தற்போது எழுதுவது எல்லாம் ஒரு ஆர்வத்தினால் மட்டுமே என்று பலப்பல முறை கூறியிருக்கிறார். கடைசி வரை பணத்துக்காக அன்றி நண்பர்களுக்காக மட்டும் சினிமா வசனம் எழுதியவரை பற்றி அவரது இறப்புக்கு பிறகு திரித்து எழுதுவது இங்கே மட்டுமே சாத்தியம்.

ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் செய்து இவரின் வலைதளத்தை மேய்ந்ததால் கிடைத்த பிற விடயங்கள், இந்த எழுத்தாளருக்கு சமீபத்தில் வாசகர் வட்டம் அதிகரித்து இருக்கிறதாம். அமெரிக்க பல்கலைகழகத்தில் படிக்கிறார்களாம். சினிமா விமர்சனம் என்னும் பேரில் கதாகாலட்சேபம். ஹிட் ரேட் கூடியிருக்கிறதாம். கமல் படிக்கிறாராம். கொண்டாடுகிறார்களாம். கொஞ்சம் காமெடி டைம் நிறைய Hallucination.

yaavarum nalam

13பியில் யாவரும் நலம் என்கிற யாவரும் நலம் மிகவும் ’வித்தியாசமான’ தமிழ்ப் படம். வித்தியாசமான என்றவுடன் காசியில் எடுத்ததா, ஹீரோவுக்கு பேச முடியாதா, க்ளைமாக்ஸில் பிழிய பிழிய சோகமா என்கிற மாதிரி எல்லாம் வித்தியாசமில்லை. அதற்கெல்லாம் ஒரே படத்தை நான்கைந்து வருடங்கள் எடுக்க வேண்டும். இப்படி எல்லாம் இல்லாமல், சாதா கதையை ஸ்பெஷல் சாதாவாக மாற்றிய கதாசிரியருக்கும்/இயக்குனருக்கும்(விக்ரம் குமார்) ஒரு ஷொட்டு(குமுதம் வாசனை!).

யாவரும் நலம் சரியாக எடுக்கப்பட்ட ‘பேய்ப் படம்’. அதைப் பேய்ப் படமாவே முடித்தது தான் ரொம்பவும் பிடித்திருந்தது. சுவாரசியமாய் இருந்தது. திகில் படங்களை எப்பவும் கொஞ்சம் ரசித்துப் பார்ப்பேன். காரணம் அனாவசியமாக லவ் டூயட் இல்லாமல், ஹீரோயினுக்கு பதில் பேயை வைத்து பயமுறுத்துவார்கள். ஹாலிவுட்டின் ஹாரர் ஜானரில் வந்த அனேக முக்கிய படங்களை பார்த்திருக்கிறேன். திகில் படத்தில் பேய் ஆவி ஆகியன இருப்பது முக்கியமில்லை. ஸ்டான்லி க்யூப்ரிக்கின் The Shining போல, பார்வையாளன் மேல் பச்சாதாபமே இல்லாத ஒரு திகில் படம் வேறில்லை. இதே மாதிரி The blair witch projectஐ சொல்லலாம்.

ஒரு மெகா சிரியலுடன் கதை கலக்கும் இடத்தில் சற்றே காதில் பூவாக தெரிந்தாலும் அதை கடைசிவரையில் நம்பும் படியாக செய்த திரைக்கதையும், திகிலூட்டக்கூடிய பிசி ஸ்ரீராமின் காமிரா கோணங்களும் தான். மாதவன் ரொம்ப நாளைக்கு பிறகு மனிதர் நடித்திருக்கிறார். திகில் படங்களுக்கு முக்கியமானது படத்தில் வரும் கதாபாத்திரங்களை தவிர அதில் வரக்கூடிய செட்டுகள் தான். எக்மோரில் போடப்பட்டதாக சொல்லப்படும் அந்த ப்ளாட் செட்டும் கலக்கல்.

கடைசியில் வரும் சில காட்சிகள், அந்த ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆகியவைகளில் ஹாலிவுட் வாடை. எழுபதிகளில் நடக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகளில், அலட்சியம் தெரிகிறது. சட்டென செத்துப் போகும் அந்த அப்பாவி தம்பியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தற்போதைய க்ராப் வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் டிசைன் சட்டை போட்டிருக்கிறார்கள்.

மற்றபடி படத்தில் ஆவி உட்பட யாவரும் நலம்.

April 22nd, 2009

இன்ன பிற – 3

us unemp chart

மேலே இருக்கும் சார்ட் எதைப்பற்றி என்று சட்டென கண்டுபிடிப்பவற்கு பிங்க் ஸ்லிப் கிடைக்காமலிருக்க லஸ் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக, மக்கள் தொகையையும் மசாலா படங்களையும் தவிர ஏறிக் கொண்டே இருக்கும் ஒரே விஷயம் வேலையின்மை. போன வருடத்தில் இருந்து போன வெள்ளிக்கிழமை வரை இழந்த வேலைகள் 5 மில்லியன். 1949க்கு பிறகு ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் வேலைகள் பறிபோயினதும் இந்த வருடத்தில் தான். தினத்தந்தி செய்தி மாதிரி கடன் துரத்தல் தாங்க முடியாமல் இந்தியர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள், வேலை போனவர்கள் மற்றவர்களை சுடுகிறார்கள், நெவாடா விபச்சாரம் ஆளில்லாமல் அவுட்-ஆப்-பிசினஸாகிறது என்று இருக்கிறது நிலவரம். கிட்டத்தட்ட யாருமே எதிர்பார்க்காத நிலையில் உலகம். நம் வாழ்வின் நாட்கள்.

சந்தை முன்னேறி விட்டது என்கிறார்கள் எகானமிஸ்டுகள். இதற்கு பதில் எதாவது ஆந்தையார், பருந்தார், குருவியார் செய்திகளை நம்பலாம்.

——–

இந்தியாவில் இருந்து வாங்கி வந்திருந்த ஜூனியர் விகடனயும் குமுதம் ரிபோர்ட்டரையும் படித்துக் கொண்டிருக்கும் போது உரைத்தது. மூன்று பக்கங்களுக்கு ஒரு பக்க விளம்பரமாக லேகிய வைத்தியர்கள் வைத்திருக்கும் வைத்தியசாலைகள். இந்த புத்தகங்களை படிக்கும் டெமோகிராபிக் இருபத்தி ஐந்திலிருந்து முப்பது வரை உள்ள இளைஞர்களாய் தான் இருக்க வேண்டும். இவர்களை மங்கிய வெளிச்ச லாட்ஜ்களை நோக்கி வரவழைத்து கொண்டிருக்கும் இந்த லேகிய திலகங்கள் பிசினஸில் இன்னமும் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

உதயம் தியேட்டர் வாசலில் இரவு 8 மணிக்கு கடை விரித்து, ’நிற்பதற்கு’ மாத்திரை விற்கும் ஆசாமியை சுற்றி நிற்கும், கொஞ்சமும் கையாலாகாத இளைஞர் கூட்டத்தின் கையில் தென்படுவது மடித்து வைக்கப்பட்ட இம்மாதிரியான அரசியல் பத்திரிக்கைகள் தான்.

——–
JUNOT DIAZ

கடந்த ஆறு மாதமாக முன்பு போல எழுத முடியாவிட்டாலும், படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்து ரசித்தது, போன வருடம் புலிட்சர் வாங்கிய, ஜூனோ டயஸ் எழுதிய The Brief Wondrous Life of Oscar Wao.

டாமினிகன் ரிபப்ளிக்கில் பிறந்த ஜூனோ போல இந்த புத்தகத்தின் கதாநாயகன் ஆஸ்கர் டாமினிகனில் பிறந்து நியு ஜெர்சியில் வாழும், 300 பவுண்ட் எடையுள்ள ஆசாமி தான். ஆஸ்கருக்கு பிடித்தமான காமிக்ஸ், விஞ்ஞான சிறுகதைகள், விடியோ கேம்கள் என்று சாதரணமாக ஆரம்பித்து ஒரு க்ளாசிக் காதல் கதையாக மாறி டாமினிகன் ரிபப்ளிக் பற்றியும் அடிமைத்தனத்தை பற்றியும் விரிவாக சொல்லும் நாவலாக உருவெடுக்கும் போது சுவாரசியமாகிறது. ஆங்காங்கே பல பத்திகள் வியக்க வைக்கின்றன. Rafael Trujillo என்னும் சர்வாதிகாரி அதிபரைப் பற்றியும் அறிமுகம் கிடைக்கிறது.

ஜூனோ போல் தமிழில் ஒரு எழுத்தாளர் உருவாகாமல் இருப்பதற்கு காரணம் நம்மூரில் இருக்கும் ஒருவிதமான போராட்டமில்லாத எதையும் ஒத்துக்கொள்ளும் மனோபாவம். அமெரிக்காவில் செட்டிலான எதாவது ஒரு தமிழ் குடும்பத்தை வைத்து இப்படி ஒரு நாவலை பின்னி எடுக்கலாம். அது தமிழ் படமாகாத பட்சத்தில்.

February 27th, 2009

He gets it !!

writer sujatha

கடந்த பத்து நாட்களாக, சுஜாதாவின் புத்தகங்களுடன் புக் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகத்தை எடுத்து, புக் கிரிக்கெட் போல திறக்கப்படும் பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு பாராவை எடுத்து எழுதியது தான் சுஜாதாட்ஸ்.

எந்தப் புத்தகமானாலும் எந்தப் பக்கமானாலும் எந்தப் பத்தியாயிருந்தாலும் ரசிக்கும்படி எழுதுவது சுஜாதாவுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. எத்தனை நல்ல எழுத்தாளர்களை படித்திருந்தாலும், எப்பவாவது எமாற்றி விடுவார்கள். ஆர்.கே நாராயண் முதல் எரிக்கா ஜாங் வரை. சுத்த ட்ரை சப்ஜெக்ட்டான தலைமைச் செயலகத்தில் கூட சுஜாதாவின் எழுத்தை ரசிக்க முடிந்ததற்கு காரணம், he gets it. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு புரியலாம்.

கடந்த ஒருவருடமாக எந்த ஒரு ’அட!’ (அ) ‘சே!’ சொல்லும் விஷயமாயிருந்தாலும் சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யோசித்து பார்ப்பது கடினமாயிருக்கவில்லை. காரணம் ஒரிகாமியிலிருந்து சியாட்டல் மழை வரை எல்லாவற்றையும் பற்றி எப்பவாவது ரெண்டு வாக்கியம் எழுதியிருக்கிறார். ஓபாமா பற்றி, ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றி(கோடம்பாக்கத்தில் ஒரு நள்ளிரவில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய அந்த இளைஞருக்கு நான் சொன்னது, ”புகழுக்குத் தயாராகுங்கள்”), சரியும் இந்திய ருபாய் மதிப்பு பற்றி என்று பல பற்றிகள்.

சுஜாதாலஜியில் ஒரு விக்கி அமைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஒரு வருடமாக. இன்னமும் அதற்கு கை வந்தபாடில்லை. இதை சுஜாதாவிடம் சொன்னால்,’ அதெல்லாம் வேண்டாம்பா, எதாவது ரெண்டு நல்ல புஸ்தகம் படி’ என்பார்.

ரொம்பவும் மிஸ் செய்வது அவருடனான அம்பலம் chat தான். கடைசியாய் அவருடன் அம்பலத்தில் பேசிய போது, எண்பதுகளில் வந்த அகப்படும் வரை திருடனல்ல என்ற ஒரு சிறுகதை நான் சிலாகித்து சொன்ன போது, அது குங்குமத்தில் வந்ததுவரை ஞாபகம் வைத்திருந்தார். இரண்டு பேர் மட்டுமே இருந்த போதும் கூட இருந்து கதைத்துவிட்டுத் தான் போனார். அவருடன் உரையாடிய பல சாட் செஷன்களை ஈமெயிலில் சேமித்து வைத்திருக்கிறேன்.

எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!

பெங்களூரில் பி.இ.எல் வேலை கிடைத்ததால் ராஜாஜி நகர் முதல் ப்ளாக்கில் ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்தேன். ஓனர் அந்த ஊர் அய்யங்கார். ‘ஆட்டோ பண்ணிக்கொண்டு எங்குள்க்கு வாங்கோ’ என்று ஒரு மாதிரியான தமிழ் பேசுவார். அடிக்கடி வந்து ‘எல்லாம் வாசியா?’(செளகரியமா) என்று விசாரித்துவிட்டு, காபி குடித்துவிட்டு, வாடகை ஏற்றிவிட்டு போவார். ஒரு முறை நான் கண்டிப்பாக அதிக வாடகை கொடுக்க மறுத்தேன். அவர் ‘ஆமாவா’ என்று புன்னகைத்துவிட்டு அடுத்த வாரம் அவுட்ஹவுசில் ஒரு சண்டைக்கார மாமியை குடிவைத்துவிட்டுப் போய்விட்டார்.

மாமி நடுராத்திரியில் எழுந்து துணி தோய்ப்பாள்…அதுவும் தோய்க்கிற கல்லைக் கணவன் மேலே உள்ள கோபத்தை எல்லாம் காட்டி அறைந்து ’ஸ்…ஸ்’ என்று பி.ஜி.எம் கொடுத்துக் கொண்டு. இது ரொம்ப நாள் தாங்காது என்று பக்கத்திலேயே ரோடு தாண்டி ‘என்’ ப்ளாக்கில் களீக் ஒருத்தரின் மாமனார் வீடு வாடகைக்கு வந்தது – அதற்கு மாறினோம். ’உன்னைப் போல் ஒரு டெனண்ட்டை நான் பார்த்ததில்லை’ என்று கண்ணால் தண்ணீர்விட்டார் ஐயங்கார். ராஸ்கல்.

- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2002.

அதேபோல், விக்ரம்சேத்தின் ‘கோல்டன் கேட் ஸானட்’ நாவல் பற்றி எழுதியபோது, ’எண்சீர் விருத்தத்தில் ஒரு நாவல் எழுதலாம்’ என்று சொன்னது வம்பாகப் போச்சு. தமிழில் இத்தனை எண்சீர் விருத்தர்கள் இருக்கிறார்களா..? தினம் எனக்கு கவிஞர்கள் தங்கள் எ.சீ.வி காவியங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் கேட்டது காவியங்களோ, எமன் எலி பிடிக்கும் கதைகளோ அல்ல. விருத்தத்துக்கு காய்-காய் மா-மா என்று ஒரு 3-3-2-2 வடிவம் உள்ளது. மேலும், விருத்தத்திலேயே சொல்லப் போனால் –

‘விருத்தங்கள் எழுதுவது சுலபம் அல்ல,
வீணான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும்
வருத்தாத விஷயத்தை எடுத்துக்கொண்டு
‘வார்முலைகள்’, ‘தமிழன்னை’ எதுவும் இன்றி
நிறுத்தாத பஸ் பிடித்தல், காதல் செய்தல்,
நீண்ட முடி, நகங்கடித்தல் போன்றவற்றை
பொறுத்திருந்து பார்த்தமைத்து அனுப்பினீரேல்,
பொழுதிருந்தால் படித்துவிட்டு எழுதுகின்றேன்.’

- கற்றதும் பெற்றதும், ஆனந்த விகடன், 2000.

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள…

அப்போதுதான் அவள் பிறந்தாள். அவள் அவளான ஒரு பெண் என்று நிர்ணயிக்கப்பட்ட அந்தக் கணம்.

மறுதினம் அம்மா காலை எழுந்து காப்பி போட்டு, மூத்தவனைப் படிக்க எழுப்பி, பாத்திரம் தேய்க்கப் போட்டு, வாசல் தெளிக்த்துக் கோலம் போட்டு, பாட்டிக்கு ஓட்ஸ் கஞ்சி வைத்து, வென்னீர் போட்டு, அப்பா பேப்பர் படித்து, ரேடியோவில் பக்தி கேட்டு, பல் தேய்த்து, காப்பி சாப்பிட்டு, குளித்து கந்தனை முணுமுணுத்து விட்டு…

அவர்கள் தினசரி அவசரங்களில் அதை முழுவதும் மறந்து விட்டார்கள்.

அந்த முட்டை பேராசை பிடித்தது போல் வளர ஆரம்பித்தது.

- எப்போதும் பெண், மங்கையர் மலர் – 1982.

”குட்மார்னிங் ஸார்!”

மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.

பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.

மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.

வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.

- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.

பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).

உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.

சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…

டில்லி மாறவில்லை.

- கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974